search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    மேட்டூர்- கொள்ளிடம் இடையே 3 தடுப்பணைகள் கட்டப்படும்: முதலமைச்சர் பழனிசாமி தகவல்

    மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை 3 தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் காவிரி நீருக்கு மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்தார்.

    இதையடுத்து அங்கு நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்றைய தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை 101 அடியை எட்டி இருக்கிறது. 67 டி.எம்.சி. நிரம்பி இருக்கின்றன. எனவே அணை முழு கொள்ளளவை எட்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

    நான் வேதனைபட்டுக் கொண்டிருந்தேன். இன்னும் பருவமழை பெய்யவில்லையே. இன்றைக்கு விவசாயிகளுக்கு எல்லாம் எப்படி தண்ணீர் திறப்பது என்று எண்ணிக் கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு வந்த உடனே மழை பொழியும். ஆனால், இந்த முறை சற்று கால தாமதமாக பெய்து இருக்கிறது.

    கால தாமதமாக பெய்தாலும் நாம் நினைத்தப்படி எல்லாம் வல்ல இறைவன் அருளால், அம்மா அருள் ஆசியால், ஏழுமலையானுடைய தரிசனத்தோடு, அவரது அருளாசியோடு இன்றைய தினம் நம்முடைய மேட்டூர் அணைக்கு இன்றைக்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஆகவே, அணை முழு கொள்ளளவை எட்டும். நம்முடைய விவசாய குடிமக்களுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்படும். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர் உள்பட அனைத்து காவிரி டெல்டா விவசாய மக்கள் பாசன வசதியை பெறுவார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    இன்றைக்கு தேவைப்படும் நீரின் அளவு சுமார் 330 டி.எம்.சி. தண்ணீர். கிழக்கு, மேற்கு கால்வாய் இன்று முதல் 137 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தினந்தோறும் 1000 கன அடி அளவு திறக்கப்படும். இதனால் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் மேட்டூர், ஈரோடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள். 7 கதவணைகள் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படுகின்றது.

    பல ஆண்டு காலமாக மேட்டூர் அணை தூர்வாரப்படாமல் இருந்தது. அந்த தூர்வாருகின்ற நிகழ்ச்சியும் அம்மாவுடைய அரசில் தான் நடத்தப்பட்டது.

    அதுமிட்டுமின்றி விவசாய மக்களுக்கு தேவையான விதை, நெல், உரம் எல்லாமே இன்றைக்கு இருப்பு இருக்கின்றது. தேவையான அளவுக்கு உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பருவ மழை காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் இருப்பதற்காக இன்றைக்கு ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகிறது. நதியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படுகின்றது. இதற்காக ரூ.1000 கோடி அம்மாவுடைய அரசு ஒதுக்கீடு செய்து 600 கோடி ரூபாய் இன்றைக்கு செலவழிக்க திட்டம் தீட்டப்பட்டு செயலாற்றிக் கொண்டிருக்கின்றன.

    மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் வரை செல்கின்றபோது, அதில் கிட்டத்தட்ட 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளோம். அது இல்லாமல் மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசினுடைய பரிந்துரையில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி செயல்படுத்த வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டு இருக்கின்றது.

    ஆகவே, அம்மாவுடைய அரசு காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு 2 தடுப்பணைகள் கட்ட இன்றைக்கு பணி தொடங்க இருக்கின்றோம். இதில் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்னொன்று கரூர் பக்கத்தில் தொடங்கப்பட உள்ளது.

    இதைப்போல கொள்ளிடம் பக்கத்தில் ஒரு தடுப்பணை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு தடுப்பு கதவணை கட்டுகிறோம்.மேலும் 3 கதவணைகள் கட்டுவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

    கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தை அம்மாவுடைய அரசு நிறைவேற்றியே தீரும். அப்படி நிறைவேற்றுகின்றபோது, நமக்கு தேவையான நீர் கிடைக்கும். 125 டி.எம்.சி. நீர் கிடைப்பதாக இன்றைக்கு மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி தொடங்கப்பட்டு இருக்கின்றது என்ற செய்தியையும் தெரிவித்து இருகின்றார்கள். அதனால் 125 டி.எம்.சி. தண்ணீர் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்தின் மூலமாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கே.சி. கருப்பண்ணன், எம்.ஆர். விஜயபாஸ்கர், டாக்டர் சரோஜா, சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×