search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை பேசிய போது எடுத்தபடம்
    X
    தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை பேசிய போது எடுத்தபடம்

    புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம்

    புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி கிளை சார்பில் பணி நிறைவு பெற்ற இயக்க ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவர்களுக்கு பாராட்டு விழா, அரசு பாடநூல் தயாரிப்பு குழுவில் இடம் பெற்ற இயக்க ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஆசிரியர் இயக்க குரல் ஆயுள்சந்தா நிதியளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா பெரம்பலூரில் நேற்று நடந்தது.

    விழாவுக்கு ஆசிரியர் கூட்டணியின் வட்டார தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். பொருளாளர் குன்னன் இயக்க அறிக்கை வாசித்தார். இதில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோரும் பேசினர். தொடர்ந்து ஆசிரியர் இயக்க குரல் ஆயுள்சந்தா நிதியளிப்பு விழாவும் நடந்தது. இதில் தமிழக ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மகளிரணி செயலாளர் இந்திராதேவி நன்றி கூறினார்.

    பின்னர் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும். மும்மொழியை எதிர்க்கிறோம். பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் அந்தந்த பகுதியில் நடைபெறும் தொழில் பற்றி கல்வி கற்க வேண்டும் என்று அரசு சொல்கிறது. இது மீண்டும் பழைய குலக்கல்வி திட்டத்தை தமிழகம் சந்திக்க நேரிடும்.

    மாநில உரிமைகளை முற்றிலும் தகர்த்தெரிந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்த கல்வி நடைபெறும் என்றால் தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வி கனவு தகர்க்கப்படும். தமிழகத்தில் உள்ள ஆசிரியர் கூட்டணி, ஏனைய ஆசிரியர் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்பு ஆகியவற்றுடன் ஒன்றாக இணைந்து இன்னொரு மொழிப்போராட்டம் நடத்துவதை போல் நடத்தி தமிழகத்தின் கல்வி உரிமையை பாதுகாப்போம். ஆகவே, மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×