search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பரசு
    X
    அன்பரசு

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் மகள் புகார்

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மகள் அளித்த புகாரின்பேரில் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    பூந்தமல்லி:

    காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு (வயது 78). இவர், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில் தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக அன்பரசுவின் மகள் சுமதி நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சிலர் சந்தேகப்படுவதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து தருமாறு அன்பரசுவின் மகன் அருளும் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த புகார்களின்பேரில் பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடுபாபு தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்பரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரேத பரிசோதனை முடிந்து மாலையில் அன்பரசு உடல் மீண்டும் அவரது வீட்டுக்கு கொண்டு வந்து பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    அதைதொடர்ந்து அன்பரசுவின் உடல் ஊர்வலமாக காட்டுப்பாக்கத்தில் உள்ள மின்சார சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
    Next Story
    ×