search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் தேன்வயல் பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பை சூழ்ந்த மழைவெள்ளம்
    X
    கூடலூர் தேன்வயல் பகுதியில் உள்ள ஆதிவாசிகள் குடியிருப்பை சூழ்ந்த மழைவெள்ளம்

    நீலகிரி மாவட்டம் வெள்ளக்காடானது - அவலாஞ்சியில் 82 செ.மீ. மழை

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் கடந்த 24 மணிநேரத்தில் அவலாஞ்சியில் 82 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை 6-வது நாளாக இன்றும் தீவிரமாக பெய்து வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சத மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தொடர்மழையால் ஊட்டி- மஞ்சூர் சாலையில், குந்தா பாலத்தில் இன்று காலை கற்பூர மரம் விழுந்தது.

    இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பர் பவானி, அவலாஞ்சி, கிண்ணக்கொரை, தங்காடு, இத்தலார், பைக்காரா உள்ளிட்ட சாலைகளிலும் மரங்கள் விழுந்துள்ளன.

    ஊட்டி - கூடலூர் சாலையில், பைக்காரா அருகே, சாலையில் விரிசல் ஏற்பட்டு, மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு வீரர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    கூடலூர் புத்தூர்வயல் அருகே, தேன்வயல் ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தற்போது, சுமார் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வெள்ளம் புகுந்தது.

    தேன்வயல் பனியர் பழங்குடியின மக்கள் புத்தூர் வயல் அரசு பள்ளியிலும், இருவயல் பழங்குடி மக்கள் தொரபள்ளி ஜி.டி.ஆர் பள்ளியிலும் வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியதால் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சிய அளிக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அவலாஞ்சியில் 82 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மற்ற இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு,

    ஊட்டி - 37.3, நடுவட்டம் - 181, கல்லட்டி - 29, கிளன்மார்க்ன்-149, குந்தா - 78, அவலாஞ்சி - 820, எமரால்டு - 181, கேத்தை - 14, கிணக்கொரை - 7, அப்பர்பவானி - 300, குன்னூர் -12, பர்லியாறு - 9, கேத்தி - 14, கோத்தகிரி-5, கொடநாடு-17, கூடலூர் - 241, தேவாலா-210. மொத்தம் மாவட்டம் முழுவதும் 2304.3 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் 230 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீலகிரி மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழைநீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டது. இந்த அணையின் நீர் மட்டம்100 அடியாகும். கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர் மட்டம் 100 அடியாக இருந்தாலும் 97 அடி வரை தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இதனால் அணைக்கு வந்த நீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    நேற்று காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து சற்று குறைந்து 12 ஆயிரம் கன அடி வந்தது. இந்த தண்ணீரும் அப்படியே திறந்து விடப்பட்டது.

    நீலகிரி மாவட்டம் மற்றும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழை காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் அணைக்கு நீர் வரத்து 38 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் அணையின் 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.

    இன்று காலை 6 மணிக்கு நீர்வரத்து சற்று குறைந்து 17 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால் அணையில் இருந்து 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் காலை 9 மணி நிலவரபடி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 34 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் பவானி ஆற்றில் 4-வது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு புற கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    இதனை தொடர்ந்து கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் ராஜாமணி கேட்டு கொண்டுள்ளார்.

    மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி பவானி ஆற்றங்கரையோரம் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். வீடுகளை வெள்ளம் சூழ்ந்தால் பொதுமக்களை தங்க வைக்க திருமண மண்டபமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேட்டுப்பாளையம் போலீசார், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினரும் பவானி ஆற்றின் கரையோரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கிராம மக்களுக்கு தண்டோரா மூலமும், நகர் புற பகுதியில் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
    Next Story
    ×