search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    நிலக்கோட்டையில் பெண்ணை கட்டையால் தாக்கி 7 பவுன் நகை பறிப்பு

    நிலக்கோட்டை அருகே பெண்ணை கட்டையால் தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஈ.பி.காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பூங்கொடி(வயது 43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    பூங்கொடி அப்பகுதியில் வத்தலக்குண்டு சாலையில் உள்ள பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று பூங்கொடி வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்பு மாலையில் வீடு திரும்பினார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து 2 வாலிபர்கள் வந்தனர். பூங்கொடி வீட்டுக்குள் சென்றதும் அங்கு வந்த அவர்கள் தாங்கள் சென்னையில் பூங்கொடியின் மகனுடன் கல்லூரியில் படிப்பதாக கூறினர். இதையடுத்து பூங்கொடி அவர்களை ஹாலில் இருக்க சொல்லிவிட்டு காபி போட சென்றார்.

    அப்போது சென்னையில் உள்ள தனது மகனிடம் போனில் பேச முயன்றார். இந்த வேளையில் திடீரென்று பாய்ந்த மர்ம நபர்கள் 2 பேரும் அவரிடம் இருந்த போனை பறித்தனர். பின்னர் அங்கு கிடந்த கட்டையால் பூங்கொடியை சரமாரியாக தாக்கினர்.

    இதை தொடர்ந்து அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை, ஒரு பவுன் தோடு ஆகியவற்றை பறித்தனர். உடனே பூங்கொடி சத்தம்போட்டார். இதையடுத்து பூங்கொடியை கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் 2 பேரும் ஓடிவிட்டனர். இதுபற்றி நிலக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? அதில் கொள்ளையர் உருவம் பதிவாகி இருக்கிறதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கொள்ளையர் தாக்கியதில் காயமடைந்த பூங்கொடி சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×