search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது
    X
    வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது

    நாமக்கல், கரூர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது

    நாமக்கல் மற்றும் கரூர் பகுதிகளில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து 53½ பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல், ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர், மோகனூர் பகுதிகளில் பட்டப்பகலில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து திருடர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், செல்லமுத்து ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மோகனூர் அருகே உள்ள தோப்பூரில் திருட்டு நடந்த நாளன்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் (சி.சி.டி.வி.) பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நாமக்கல் அருகே கொண்டிசெட்டிபட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பதிவு எண் இல்லாமல் வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    பின்னர் காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே உள்ள நல்லையார்கோணத்தை சேர்ந்த மைக்கேல் என்பவரின் மகன் ஸ்டீபன் (வயது 32), கரூர் மாவட்டம் குளித்தலை இனங்கூர் மேற்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் தர்மன் என்ற தர்மராஜ் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    மேலும், அவர்கள் இருவரும் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பட்டப்பகலில் காரில் சென்று வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டீபன், தர்மனை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 53½ பவுன் நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

    துரிதமாக செயல்பட்டு திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.
    Next Story
    ×