search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் - ராமதாஸ் அறிக்கை

    சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பாணை மீது, போதிய எண்ணிக்கையில் ஒப்பந்தப்புள்ளிகள் வராத நிலையில், அதற்கான அவகாசம் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

    சேலம் உருக்காலையை வாங்க உலக சந்தையில் போதிய ஆர்வம் காட்டப்படாத நிலையில் மீண்டும் மீண்டும் அதை விற்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு அதன் தொழிலாளர்கள் முதல் தமிழ்நாட்டு மக்கள் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போதிய எண்ணிக்கையில் ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்படாததை காரணம் காட்டி, அம்முயற்சியை கைவிடுவது தான் சரியானதாக இருக்கும்.

    ஆனால், ஒப்பந்தப் புள்ளிகள் தாக்கல் செய்யப்படுவதற்கான காலக்கெடுவை மேலும் 20 நாள்களுக்கு அதாவது ஆகஸ்ட் 20-ந்தேதி வரை நீட்டித்து செயில் எனப்படும் இந்திய இரும்பு எஃகு நிறுவனம் ஆணையிட்டிருக்கிறது.

    இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல் மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும். இந்த துரோகத்தை அனுமதிக்க முடியாது.

    சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்குவதற்காக மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்படும் வாதம் அந்த ஆலை கடுமையான நட்டத்தில் இயங்குகிறது என்பது தான்.

    அண்மையில் சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் கூட சேலம் இரும்பாலையில் தயாரிக்கப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரித்து, சிறப்பான முறையில் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபத்தில் இயக்க முடியும்.

    ஆலையின் உற்பத்தித் திறன் மற்றும் சந்தைப்படுத்துதல் திறனை அதிகரித்து, அதன் மூலம் ஆலையை இலாபத்தில் இயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நீட்டிப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்து, ஆலை பொதுத்துறை நிறுவனமாகவே இயங்கும் என அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×