search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    முத்துப்பேட்டை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

    முத்துப்பேட்டை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே செறுபட்டாக்கரையை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் சேகர்(வயது45). கூலி தொழிலாளி. முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக புதிதாக பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நேற்று இந்த பணியில் சேகர் ஈடுபட்டு கொண்டிருந்தார். சாலையோரத்தில் வடிக்கால் அமைப்பதற்காக பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

    அப்போது அங்கிருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் வேலை பார்த்து கொண்டிருந்த சேகர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சேகரின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து சேகர் மனைவி நாகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் திட்ட மதிப்பீட்டில் உள்ள சாலையோர கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×