search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையன் வெங்கையா
    X
    கொள்ளையன் வெங்கையா

    பொதுமக்கள் பிடித்து கொடுத்த கொள்ளையன் - ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓட்டம்

    பொதுமக்கள் பிடித்து கொடுத்த கொள்ளையன் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடியதையடுத்து, போலீசார் அவனை தேடி வருகிறார்கள்.
    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு விநாயகபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார். அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையனை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் திருநின்றவூரை சேர்ந்த வெங்கையா என்பது தெரிந்தது. அவனை செவ்வாப்பேட்டை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவனது உடலில் காயங்கள் இருந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கும்படி புகார் கொடுத்த நந்தகுமாரிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு கொள்ளையனை அழைத்து சென்றபோது போலீசார் யாரும் உடன் செல்லவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே ஆஸ்பத்திரிக்கு சென்ற நந்தகுமார் கொள்ளையன் வெங்கையாவை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    போலீசார் இல்லாததை அறிந்த வெங்கையா ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவனை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘பிடித்து கொடுத்த கொள்ளையனை போலீசார் கோட்டைவிட்டு விட்டனர். அவர்களும் கொள்ளையனை பிடிப்பது கிடையாது. நாங்கள் பிடித்து கொடுத்தாலும் அலட்சியமாக நடந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி கோவில் பாதுகாப்புக்கு போலீசார் அனைவரும் சென்றுவிட்டனர். இதனால் கொள்ளையனை ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது பாதுகாப்புக்கு எந்த போலீசாரும் செல்லவில்லை என்று தெரிகிறது.


    Next Story
    ×