search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைத்ரேயன் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
    X
    மைத்ரேயன் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

    அ.தி.மு.க.வின் இரட்டை தலைமையில் சாதக-பாதகங்கள் உள்ளது: மைத்ரேயன்

    ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை இரண்டு நிலைப்பாடுகளிலும் சாதக- பாதகங்கள் இருக்கிறது என்று முன்னாள் எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருந்த மைத்ரேயன் பதவிகாலம் நேற்றுடன் முடிந்தது. ராஜ்ய சபாவில் உருக்கமாக பேசி விடைபெற்ற மைத்ரேயன் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எனது எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெற்று சென்னைக்கு வந்துள்ளேன். அம்மாவுக்கு நன்றி செலுத்தினேன். வரக்கூடிய காலங்களில் கழகத்தின் செயல்பாடுகள், எண்ணங்களை கருத்தில் கொள்வேன்.

    கே:- எம்.பி.யாக இருந்த காலகட்டங்களில் உங்கள் செயல்பாடு எப்படி இருந்தது.

    ப:- எப்போதும் நான் கள போராட்டக்காரன். எனவே களத்தில் நின்று நான் எதையும் சந்திப்பேன்.

    கே:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் உங்களுக்குரிய அங்கீகாரம் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

    ப:- இதுகுறித்து நான் இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. மக்களவை தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று விரும்பினேன். தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு நான் போட்டியிட விரும்பினேன். எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

    அம்மாவால் 3 முறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நின்று தேர்ந்தெடுக்கப்பட்டவன். எனவே மாநிலங்களவையில் 3 பொறுப்புகளில் ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். அதுவும் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் நிச்சயமாக எனக்கு இருக்கிறது.

    மைத்ரேயன் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

    கே:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உங்களுக்குரிய முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக கருதுகிறீர்களா?

    ப:- காலம் பதில் சொல்லும். கழக தொண்டர்கள் அனைவரும் உயிர்ப்போடு இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக வருங்காலகட்டத்தில் கழகத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்கள்.

    கே:- ஜெயலலிதா இருந்த போது இருந்த ஆட்சிபோல் இப்போது இருக்கிறதா? அ.தி.மு.க. ஆட்சி எப்படி உள்ளது?

    ப:- இதற்கான பதிலை தமிழ்நாட்டு மக்கள் தக்க நேரத்தில் தேர்தல் வரும் போது நிச்சயமாக வெளிப்படுத்துவார்கள்.

    ப:- தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அம்மாவின் பிரசாரம் காரணமாகவே வெற்றி பெற்று வந்தவர்கள். எனவே அந்த வகையில் இது அம்மாவின் ஆட்சிதான்.

    கே:- திராவிட இயக்கம் உயிர்ப்போடு இருக்க அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் தி.மு.க.வுக்கு வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைத்திருக்கிறாரே?

    ப:- அது அவருடைய நிலைப்பாடு. விருப்பம்.

    கே:- இப்போதுள்ள ஆட்சியில் அ.தி.மு.க.வினருக்கு மரியாதை இல்லை. அதனால் தி.மு.க.வுக்கு வரவேண்டிய கால கட்டம் வந்துள்ளது என்று ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    ப:- இதற்கான பதிலை எங்களது தலைமை சொல்ல வேண்டும்.

    கே:- அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை இரண்டு நிலைப்பாடுகளிலும் சாதக- பாதகங்கள் இருக்கின்றன. கட்சிக்கு தலைமை, ஆட்சிக்கு தலைமை இரண்டும் ஒன்று சேர பயணிக்கும்போது இரட்டைத் தலைமையாக இருந்தால்கூட அது நல்ல முறையில் பயணிக்க கூடிய சாத்திய கூறுகள் இருக்கிறது.

    கே:- நீண்ட நாள் அரசியலில் இருக்கிறீர்கள். அ.தி.மு.க. பற்றி கூறிவிட்டீர்கள். தி.மு.க.வின் செயல்பாடு எப்படி உள்ளது?

    ப:- இப்போதுதான் மாநில அரசியலுக்கு மறுபடி வந்திருக்கிறேன். தொடர்ந்து எனது பதிவுகளை செய்வேன்.

    கே:- தி.மு.க.வை விமர்சிக்க தயங்குவது போல் தெரிகிறதே?

    ப:- தயக்கமே கிடையாது. 6 மாதத்துக்கு முன்பு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு வரும்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தி.மு.க. ஆதரவாக இருக்கும் என்று ஸ்டாலின் சொன்னார்.

    அப்போதே நான் தி.மு.க. வுக்கு மக்களவையில் ஒரு எம்.பி.கூட கிடையாது என்று பதிவிட்டேன். எங்கே விமர்சிக்க வேண்டுமோ அங்கு கண்டிப்பாக விமர்சிப்பேன்.

    கே:- ஜெயலலிதா இருந்திருந்தால் உங்களுக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்திருக்கும் என நினைக்கிறீர்களா?

    ப:- அம்மா இருந்திருந்தால் என்ற கேள்வி பலரது மனதிலே எதிரொலிக்கும். அது இதிலும் எதிரொலிக்கதான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் கவுன்சிலர் சின்னையன் மற்றும் மயிலாப்பூர் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×