search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ஆகஸ்டு மாதம் முதல் நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் பிரசாரம்- முதல்வர் அறிவிப்பு

    நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர் கொள்ளவும், வரும் காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்படாமல் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தீவிர நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த மக்கள் இயக்கத்தில், கீழ்க்காணும் வழிமுறைகளை அம்மா அரசு கண்டறிந்து செயல்படுத்த உள்ளது.

    * மழை நீர் சேகரித்தல், நீர் நிலைகளைப் பாதுகாத்து அதன் கொள் திறனை அதிகரித்தல்.

    * நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்குதலை நிலைப்படுத்துதல்.

    * வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்துதல்.

    * பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல். இதன் மூலம் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி கோட்பாட்டினை தீவிரமாக கடைபிடித்தல்.

    * ஆறுகள், முக்கிய கடற்கரை பகுதிகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள் மற்றும் சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல்.

    இந்த தமிழ்நாடு நீர் வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல, எனது தலைமையின் கீழ், இவ்வரசால் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் கொண்ட குழுவின் ஆலோசனையுடன் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் மறுசீரமைப்புக் கழகத்தின் மூலம் உரிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படும்.

    இச்செயல் திட்டம் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையேற்று, அவர்கள் கீழ் உள்ள பலதரப்பட்ட துறைகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும். கீழ்மட்டத்தில் நகர்ப் பகுதிகளில் வார்டு வாரியாகவும், கிராமத்திலும், ஒன்றியத்திலும் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்துகொண்டு செயல்படுவதை இத்திட்டம் உறுதி செய்யும்.

    ஒரு சிறப்பு முயற்சியாக, இந்த நீர்வள பாதுகாப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற ஒரு தீவிர பிரசார இயக்கம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும். இந்த தீவிர இயக்கத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்பர். மாவட்ட ஆட்சியர்கள், இத்தீவிர இயக்கப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவர்.

    இந்த இயக்கத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, பொது மக்களின் பங்களிப்பு, அரசுசாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பு திரட்டப்பட்டு, மக்கள் இயக்கமாக இந்த இயக்கம் செயல்படுத்தப்படும்.

    இந்த தீவிர இயக்கத்தின் மூலம் பருவமழை காலத்திற்கு முன்பு நீர்நிலைகளை மேம்படுத்தி, அதிக அளவு மழை நீரை சேமிக்க வழி வகை செய்யப்படும்.

    தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கத்தின் மூலம் நீண்ட கால செயல்பாடுகளாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * மழைக்காலங்களில் உபரி நீர் மற்றும் வெள்ளநீரினை சேகரிக்கும் திட்டங்களை தொடர்ந்து கண்டறிந்து செயல்படுத்துதல். கோதாவரி-காவேரி ஆறுகளை இணைக்க மத்திய அரசுடன் அம்மாவின் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளுதல்.

    * நிலத்தடி நீர் செறிவூட்டும் திறனை மேம்படுத்துவதற்காக, குறிப்பாக அதி நுகர்வு மற்றும் அபாயகரமான குறுவட்டங்களில், பாசன முறைசார் மற்றும் பாசன முறைசாரா ஏரிகள், தடுப்பணைகள், பாசன கட்டுமானங்கள் ஏற்படுத்தும் திட்டங்கள் தீட்டி செயல்படுத்துதல்.

    * வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் மானாவாரி வேளாண்மைக்காக நீர் சேகரிப்புத் திட்டம் போன்றவை ஊக்க படுத்தப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    Next Story
    ×