search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்டபத்தில் மீன்பிடி விசைப்படகு ஒன்றை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது எடுத்தபடம்.
    X
    மண்டபத்தில் மீன்பிடி விசைப்படகு ஒன்றை உடைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது எடுத்தபடம்.

    மீன்பிடி தொழிலை கைவிட்டு படகுகளை உடைக்கும் மீனவர்கள்

    இலங்கை கடற்படை பிரச்சினை, டீசல் விலை உயர்வு எதிரொலியாக மண்டபத்தில் மீன்பிடி தொழிலை விட்டு தங்களது படகுகளை மீனவர்கள் உடைத்து விற்று வருகின்றனர்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் விளங்கி வருகின்றது. மீன்பிடி தொழிலை நம்பி மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. அதுபோல் மீன்பிடி தொழிலை நம்பி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளாகவே ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையாலும், படகு பறிமுதல் சம்பவங்களாலும் அவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்கவே செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் டீசல் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் மீன்பிடி தொழில் செய்யவே முடியாத நிலை உள்ளதாக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இலங்கை கடற்படை பிரச்சினை மற்றும் டீசல் விலை உயர்வாலும் படகுகளை தொடர்ந்து நடத்த முடியாததால் மண்டபத்தில் மீனவர்கள் சிலர் தங்களது படகுகளை கரையில் ஏற்றி வைத்து தொழிலாளர்களை கொண்டு உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் உடைக்கப்படும் படகுகளில இருந்து எடுக்கப்படும் மரப்பலகைகள் விறகுகளாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

    மேலும் படகுகளில் உள்ள செம்பால் ஆன போல்ட், நட்டுகள், புரொபல்லர், என்ஜின்களையும் குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர். மீன்பிடி தொழிலை விட்டு சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள படகுகளை உடைத்து வரும் சம்பவம் அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரிக்க அதிகரிக்க இன்னும் 10 ஆண்டுகளில் மீன்பிடி தொழிலே செய்ய முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்படுவதுடன், மீன்பிடி தொழில் முழுமையாக அழியும் நிலை உள்ளதாகவும், இதேபோல் அனைத்து மீன்பிடி படகுகளும் உடைக்கும் நிலைமை வரும் என்றும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
    Next Story
    ×