search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரெட்டேரி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறிப்பு - 3 பேர் கைது

    ரெட்டேரி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வியாபாரிகளிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பு அருகே 3பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

    அங்கு தள்ளுவண்டி கடையில் போண்டோ விற்றுக் கொண்டிருந்த ஆனந்த்(40) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். தர மறுக்கவே அவரது கடையை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    பின்னர் செந்தில் நகர் மாநகர பஸ்சின் கண்ணாடியை கத்தியால் அடித்து உடைத்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களை மிரட்டிய படி சென்ற அவர்கள் ராஜமங்கலம் பகுதியில் ஒரு டீக்கடைக்காரரை மிரட்டி பணம் கேட்டனர். அவர் மறுக்கவே கடையில் இருந்த பிஸ்கட் பாட்டில்களை கீழே தள்ளி உடைத்தனர்.

    இதுகுறித்து பாதிக்கபட்ட ஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் தனித்தனியாக ராஜமங்களம் போலீசில் புகார் கொடுத்தனர். இதையொட்டி வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மாரியப்பன் அப்பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார்.

    இந்நிலையில் 100 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள புதர் போன்ற பகுதியில் 3 பேர் மறைந்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    உடனே அங்கு சென்று கத்தியுடன் மறைந்திருந்த 3 பேரையும் மடக்கி பிடித்து அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெரம்பூர் தீட்டி தோட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் (21), அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்த சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 2 கத்தியும் பறிமுதல் செய்தனர் அருணாச்சலம் மற்றும் சந்தோசை கைது செய்து சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனார்.

    Next Story
    ×