search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக்
    X
    தண்ணீர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக்

    தனியார் தண்ணீர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக்

    நாளை முதல் தண்ணீர் எடுக்கப்போவதில்லை என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் லாரிகள் மூலம் தான் பல இடங்களுக்கு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

    தினமும் 1,500 லாரிகள் மூலம் மொத்தம் 10 ஆயிரம் நடைகள் சென்று தண்ணீர் வினியோகத்தில் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

    இதில் 900 லாரிகள் சென்னை குடிநீர் வாரியத்துக்காக ஓடுகின்றன. 600 லாரிகள் தனியார் வசம் உள்ளது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் வாரிய லாரிகள் தண்ணீரை நிரப்பி சென்னையில் வினியோகம் செய்து வருகின்றனர்.

    அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களுக்கு இந்த லாரிகள் அடிக்கடி வராது. ஒருமுறை குடிநீர் வாரியத்தில் பதிவு செய்து தண்ணீர் வாங்கினால் 30 நாட்களுக்கு பிறகுதான் அடுத்த லாரி வரும். ஐ.டி. நிறுவனங்கள், ஓட்டல்கள், கம்பெனிகளுக்கு இதே நிலைதான் உள்ளது.

    இதனால் இவர்கள் அதிக விலை கொடுத்து தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்று வருகின்றனர்.

    தனியார் லாரிகள் பெரும்பாலும் பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருப்போரூர், நாவலூர், பெரியபாளையம், திருமழிசை, ஆவடி, சென்னீர்குப்பம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ராட்சத போர்வெல் அமைத்து தண்ணீர் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

    இதற்கு பல இடங்களில் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவதுடன் லாரிகளை சிறைபிடித்தும் வருகின்றனர். அனுமதியின்றி சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக பொதுமக்கள் போலீசில் புகார் செய்தும் வருகின்றனர்.

    இதனால் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க தனியார் லாரி டிரைவர்களை போலீசார் பல இடங்களில் கைது செய்தும் வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் (8-ந்தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் (ஸ்டிரைக்) ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 600 க்கும் மேற்பட்ட தனியார் லாரிகள் நாளை முதல் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று ஓட்டல் அதிபர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

    இதில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா? நிராகரிக்கப்படுமா? என்பதை பொறுத்து போராட்டம் இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×