search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    பழனி அருகே மொபட் மீது வேன் மோதி அக்காள்-தம்பி பலி

    பழனி அருகே மொபட் மீது சரக்குவேன் மோதி விபத்துக்குள்ளானதில் அக்காள்-தம்பி பலியாகினர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் பகவதி (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (28). இவர்கள், தங்கள் மகனுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்திருந்தனர்.

    இந்நிலையில் விழாற்கான அழைப்பிதழை உறவினர்களிடம் கொடுத்து வந்தனர். நேற்று பகவதி தனது மனைவி மற்றும் அக்காள் மகாலெட்சுமி (37) ஆகியோரை மொபட்டில் ஏற்றிக் கொண்டு அழைப்பிதழை கொடுக்க ராசாபுரம் சென்றார். அங்கு அழைப்பிதழை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு, பழனி ராமநாதநகரை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

    பழனி-பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் ராமநாதநகர் பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து பகவதி உள்ளிட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பகவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகாலெட்சுமி, விஜயா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த மகாலெட்சுமி, விஜயா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேலும் பகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மகாலெட்சுமி பரிதாபமாக இறந்தார். விஜயாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த விபத்து குறித்து பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனுக்கான காதணி விழா அழைப்பிதழை கொடுக்க வந்தபோது, விபத்தில் சிக்கி அக்காளுடன் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் கோரிக்கடவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×