search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேங்கர் லாரி வேலை நிறுத்தம்
    X
    டேங்கர் லாரி வேலை நிறுத்தம்

    எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம் தொடங்கியது

    சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் இன்று காலை 6 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாமக்கல் :

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில், 5 ஆயிரத்து 500 எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த லாரிகள் மூலம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. முந்தைய 5 ஆண்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், அதன் பிறகு போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் படி அனைத்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கும் பணி அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.

    புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்று இருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 700 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நாமக்கல்லில் கடந்த 20-ந் தேதி நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், சங்கத்தின் சார்பில் ஆயில் நிறுவனங்களுக்கு வேலைநிறுத்தம் தொடர்பாக கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது.

    டேங்கர் லாரி வேலை நிறுத்தம்

    அதில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆயில் நிறுவன அதிகாரிகள் கடந்த 26-ந் தேதி தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதன் காரணமாக திட்டமிட்ட படி வேலை நிறுத்தம் தொடங்கும் என்று டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது. இதன்படி, இன்று காலை 6 மணி முதல் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று கேஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×