search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
    X
    ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    திண்டிவனம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுபேட்டை மெயின் ரோட்டில் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்த சாலையின் வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களுக்கு வாகனங்கள் சென்று வந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையொட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கடையின் உரிமைதாரர்களுக்கு பலமுறை நோட்டீசு அனுப்பப்பட்டு கடைகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    ஆனாலும் அவர்கள் கடைகளை காலி செய்யவில்லை. இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் வெள்ளிமேடுபேட்டை பகுதிக்கு வந்தனர். அங்கு கட்டப்பட்டு இருந்த 15-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசுவரி தலைமையில் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, ரோசணை, ஒலக்கூர் போன்ற பகுதிகளை சேர்ந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×