search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
    X

    எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

    தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. சட்டசபை கூட்டத் தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. இதில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். மேலும், புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள்.

    இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

    கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்து எந்தெந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவது?, எவ்வளவு நிதி ஒதுக்குவது? என்பது குறித்தும், புதிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

    அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பிறகு, சட்டசபை கூட்டத் தொடரில் அவை அறிவிப்புகளாக வெளியிடப்படும். 
    Next Story
    ×