search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு
    X

    பல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன் நகை திருட்டு

    பல்லடம் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 6 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 39). இவருடைய மனைவி கீதாபிரியா (36). இவர்களுக்கு பிரிதுல் (8), யுவன் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பிரிதுல் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பும், யுவன் யு.கே.ஜி.யும் படித்து வருகின்றனர். பிரகாஷ் பல்லடத்தில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.

    தினமும் காலையில் கடைக்கு செல்லும் பிரகாஷ் மதிய உணவுக்கு மட்டும் வீட்டிற்கு வருவார். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். பிரகாஷ் எலெக்ட்ரிக்கல் கடைக்கு சென்று விட்டார். இதனால் கீதா பிரியா மட்டும் வீ்ட்டில் இருந்தார். அவரும் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பிரகாஷ் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீ்ட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பீரோக்கள் இருந்த அறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த பீரோக்களில் ஒன்று திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த துணிகள் கீழே சிதறிக்கிடந்தன. அதில் வைத்து இருந்த 6 பவுன்நகை திருட்டுப்போனது தெரியவந்தது.

    இதற்கிடையில் கடைக்கு சென்ற கீதா பிரியாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு செல்வதை நோட்டமிட்ட ஆசாமிகள், பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்து இருந்த 6 பவுன்நகையை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவம் நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையை பதிவு செய்தனர். பின்னர் அந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×