search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நயினார்கோவில் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் நிரம்பிய ஊருணியை படத்தில் காணலாம்.
    X
    நயினார்கோவில் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் நிரம்பிய ஊருணியை படத்தில் காணலாம்.

    குழாய் உடைந்து வீணாகிய குடிநீரைக் கொண்டு ஊருணியை நிரப்பிய மக்கள்

    காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து அதில் வீணாகிவரும் தண்ணீரைக்கொண்டு கிராம மக்கள் ஊருணியை நிரப்பிவிட்டனர். குழாய் உடைப்பை சரிசெய்ய 6 மாதத்துக்கும் மேலாக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக தெரிவி்த்துள்ளனர்.
    நயினார்கோவில்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை தேடி அலைந்துதிரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது வேதனை அளிப்பதாக உள்ளது.

    சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப்போல குழாய் உடைப்பால் சிறிது சிறிதாக வெளியேறிய நீரால் ஒரு ஊருணி எப்போதும் தண்ணீருடன் காட்சி தந்து கொண்டிருக்கிறது.

    பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் மருதவனம் மாகாளியம்மன் கோவில் ஊருணிதான் அது. அதன் அருகே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் தண்ணீர் வீணாகியது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் பொக்லைன் எந்திர உதவியுடன் சிறிய ஓடை தோண்டி, வீணாகி வந்த தண்ணீரை அருகில் உள்ள ஊருணிக்கு திருப்பி விட்டனர்.

    இப்படியாக சுமார் 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்படவில்லை. தொடர்ந்து அந்த ஊருணிக்கு காவிரி குடிநீர் சென்று கொண்டிருப்பதால், அது நிரம்பி எப்போதும் தண்ணீருடன் காட்சி தருகிறது.

    நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளிலும் மழையில்லாமல் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஆனால், மருதவனம் மாகாளியம்மன் கோவில் ஊருணியில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதால், சுற்றுப்புற பகுதியில் நிலத்தடிநீர் நன்றாக இருக்கும்.

    ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து ஊருணி நிரம்பும் அளவுக்கு அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதுதான் வேதனை அளிப்பதாக உள்ளது என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்..

    இதுகுறித்து அந்த கிராமமக்கள் கூறியதாவது:-

    நயினார்கோவில் யூனியனில் 37 ஊராட்சிகள் உள்ளன. இதில் 101 கிராமங்கள் அடங்கி உள்ளன. இந்த கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் கசியும் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கிடைக்கும் குடிநீரையும் அதிகாரிகள் அலட்சியத்தால் இவ்வாறு வீணாக்குவது வேதனையடைய செய்கிறது. உடைப்பை சரி செய்து முறையாக வினியோகம் செய்தால் நயினார்கோவில் யூனியனில் பல கிராமங்களில் குடிநீருக்கு பிரச்சினை ஏற்படாது. எனவே இதன் பின்னரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×