search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்
    X

    மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம்

    வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அக்னி நட்சத்திரம் முடிந்து 3 வாரம் ஆகியும் தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்துகிறது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தாமதம், அரபிக்கடலில் உருவான வாயு புயல் ஆகிய காரணங்களால் வெப்ப நிலை மேலும் அதிகரித்தது.

    குறிப்பாக வடதமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக வெப்ப நிலை சராசரியை விட மிக அதிகமாக உள்ளது. நேற்றும் அதிக வெப்பம் காணப்பட்டது.

    தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் அதிகபட்சமாக தலா 107 டிகிரி வெயில் பதிவானது. நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி, மதுரை விமான நிலையம், நாகப்பட்டினத்தில் தலா 105 டிகிரி, மதுரை தெற்கு, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 102 டிகிரி, கடலூர், கரூர், பரமத்தி, தொண்டியில் தலா 100 டிகிரி வெயில் பதிவானது.

    புதுச்சேரி, காரைக்காலில் தலா 102 டிகிரி வெயில் பதிவானது.



    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து நீடிக்கும். தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசவும் வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், வேலூர், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும்.

    வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மத்திய அரபிக்கடலில் பல பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. தென் அரபிக்கடல் பகுதியில் பருவமழை மிதமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×