search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கிரு‌‌ஷ்ணகிரியில் கண்டன ஊர்வலம்
    X

    டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கிரு‌‌ஷ்ணகிரியில் கண்டன ஊர்வலம்

    தேசிய அளவில் டாக்டர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கிரு‌‌ஷ்ணகிரியில் கண்டன ஊர்வலம் நடந்தது.
    கிரு‌‌ஷ்ணகிரி:

    தேசிய அளவில் டாக்டர்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து கிரு‌‌ஷ்ணகிரியில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஊர்வலம் நடந்தது. கிரு‌‌ஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தி சாலை வழியாக 5 ரோடு ரவுண்டானா வரை சென்று நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்திற்கு கிரு‌‌ஷ்ணகிரி இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ராஜசேகரன், செயலாளர் டாக்டர் தனசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய பல் மருத்துவ சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் கஜபதி, இந்திய பாரா மெடிக்கல் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தின் போது மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை கைது செய்ய வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். பின்னர் இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரியில் இளநிலை டாக்டர் பரிபாமுகர்ஜி என்பவர், வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த செயலை கண்டித்து கடந்த 14-ந் தேதி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தற்போது மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. மருத்துவ மையங்களையும், மருத்துவ ஊழியர்களையும் பாதுகாக்க தேசிய அளவில் கடுமையான சட்டம் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. எனவே, இந்த ஒரு நாள் போராட்டம் மட்டுமே போதாது என்று நினைத்த தேசிய மருத்துவ சங்கம், அடுத்த இரண்டு நாட்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, முக்கிய நடவடிக்கையாக ஜூன் 17-ந் தேதி (நேற்று) காலை 6 மணி முதல் ஜூன் 18-ம் தேதி (இன்று) காலை 6 மணி வரை மருத்துவ சேவைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. மக்களின் நலன் கருதி, அத்தியாவசிய மருத்துவ சேவைகள் மட்டுமே தொடரும். வெளி நோயாளிகள் பிரிவுகள் மட்டுமே இயங்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாவட்டத்தில் 7 அரசு ஆஸ்பத்திரிகள், 55 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 75 பெண் டாக்டர்கள் உள்பட 400 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 250 டாக்டர்கள் நேற்றைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 70 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. அதில் 400 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் 150 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். 
    Next Story
    ×