search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருபுவனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    திருபுவனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    திருபுவனையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    திருபுவனை வங்கி தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி. (வயது 50). இவர் அங்குள்ள தனியார் சோப்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் ஓய்வு நாட்களில் விவசாய வேலையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை மலைச்சாமி அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவரின் விவசாய நிலத்துக்கு வேலைக்கு சென்றார். அங்குள்ள மோட்டார் பம்ப் செட் அருகே கடப்பாரையால் பள்ளம் தோண்டினார்.

    அப்போது பூமிக்கு அடியில் சென்ற மின்சார கேபிளில் கடப்பாரை உரசியதால் மின்கசிவு ஏற்பட்டு மலைச்சாமியை மின்சாரம் தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே மலைச்சாமி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு வசந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின்சாரம் தாக்கி பலியான மலைச்சாமிக்கு மூக்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×