search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை- ஐகோர்ட் கடும் கண்டனம்
    X

    நீர் மேலாண்மை தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை- ஐகோர்ட் கடும் கண்டனம்

    நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
    சென்னை:

    வேலூரில் நல்ல தண்ணீர் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையின் போது, சென்னை நகரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த தண்ணீர் பஞ்சத்தை போக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கடந்த வாரம் கேள்வி கேட்டு இருந்தனர்.

    இந்த உத்தரவின்படி, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் அதன் தலைமைப் பொறியாளர் ஆறுமுகம் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அவர் கூறியிருப்பதாவது:-

    2017-ம் ஆண்டு பருவமழை பொய்த்து, சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகள் வறண்டதால், நகருக்கு வழங்கும் தண்ணீரின் அளவை, ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் என்பது, ஜூன் 1-ம் தேதி முதல் 525 மில்லியன் லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.

    மீஞ்சூர், நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் மூலம், தற்போது ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் வழங்கப்படுகிறது. 3,231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது, 26 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதேபோல, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது சுத்தமாக தண்ணீர் இல்லை.



    1,465 மில்லியன் கன அடிநீர் கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 569 மில்லியன் கன அடிநீர் மட்டுமே இருப்பு உள்ளது. அங்கிருந்து, ஒரு நாளைக்கு 180 மில்லியன் லிட்டர் நீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது.

    ஒரு நாளைக்கு 900 தணணீர் லாரிகள் மூலம் 9,400 நடைகள் மூலம் தற்போது தண்ணீர் விநியோகம் வழங்கப்படுகிறது. குறுகிய சாலைகளில் செல்ல ஏதுவாக, 2,000 முதல் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய லாரிகள் மூலமும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர் முதல் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

    தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள், ரூ.212 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது

    இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணிடம் சரமாரியாக பல கேள்விகளை கேட்டனர்.

    ‘தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண இதுவரை மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஏரி, குளங்களை தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கை என்ன? மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? சென்னைக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம், சோழவரம் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் மாற்று ஏற்பாடுகளை ஏன் இதுவரை செய்யவில்லை? முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

    கடந்த ஆண்டு நீர் வற்றி வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கடைசி நேரத்தில் மழை நீர் சேமிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் என்ன பலன் ஏற்பட போகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், ‘பருவமழை பொய்த்து போனதால் தண்ணீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 270 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் 270 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோழவரம் ஏரி ரூ.38 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் மூன்றாவது யூனிட் செயல்படத் துவங்கி விட்டால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு பருவமழையை எதிர்பார்க்க தேவையில்லை’ என்று கூறினார்.

    இதற்கு நீதிபதிகள், நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.

    நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம், தூர்வார எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Next Story
    ×