search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல் அருகே காவலாளி வெட்டிக் கொலை: அண்ணன்- தம்பி சிக்கினர்
    X

    நாமக்கல் அருகே காவலாளி வெட்டிக் கொலை: அண்ணன்- தம்பி சிக்கினர்

    நாமக்கல் அருகே காவலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன்- தம்பியை போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பொம்மப்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 75). இவர் முதலைப்பட்டியில் உள்ள யுவராஜ் என்பவருக்கு சொந்தமான கார் பட்டறையில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுவராஜியின் மைத்துனர் மாதேஸ்வரனின் (49)அக்காள் மகன்கள் கார் பட்டறையில் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக பழனி இருந்தார்.

    நேற்று முன்தினம் கார்பட்டறையில் இரவு பணியில் இருந்த பழனியை நள்ளிரவில் மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பழனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து நல்லிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    சேந்தமங்கலம் அடுத்த துத்திகுளத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். திருச்சி மாவட்டம் துறையூரில் வசித்து வரும் இவரது அக்காள் சாந்தியின் மகன்களான சதீஸ் குமார், ராதாகிருஷ்ணன், ஹரிபிரசாத் ஆகியோரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கிருந்து 3 பேரும் மாமா மாதேஸ்வரனுக்கு தாங்கள் சம்பாதித்த பணத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை பெற்றுக் கொண்ட மாதேஸ்வரன் தனது மைத்துனர் யுவராஜ் என்பவருக்கு கார் பட்டறை வைத்து கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் சதீஸ் குமார், ராதாகிருஷ்ணன், ஹரிபிரசாத் ஆகியோர் தாங்கள் அனுப்பிய பணத்தை திரும்ப தருமாறு மாதேஸ்வரனிடம் கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி இரவு மாதேஸ்வரனை வெட்டிக் கொலை செய்தனர். முன்னதாக அவர்கள் முதலைப்பட்டியில் உள்ள கார் பட்டறையிலும் பெட்ரோல் குண்டு வீசினர். இதை காவலாளி பழனி பார்த்துள்ளார்.

    இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஸ் குமார், ராதாகிருஷ்ணன், ஹரிபிரசாத் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக பழனி இருந்ததால் அவரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, ஜாமீன் பெற்று 3 பேரும் ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் தக்க தருணம் பார்த்து பழனியை தீர்த்துக் கட்டி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சகோதரர்கள் சதீஸ் குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்களிடம் கூலிப்படை அல்லது வேறு யாரும் கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×