search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 13 வாய்க்கால்கள் தூர்வாரப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 13 வாய்க்கால்கள் தூர்வாரப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 13 வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
    மதுரை:

    மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் குப்பைகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் வீடுகளில் சேகரிக்கும் வகையில் புதிதாக பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    அவற்றை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களுக்கு பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகளை அமைச்சர் வழங்கி பேசியதாவது:-

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக, தூய்மையாக வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் மிக உயர்ந்த நகரமாக, குப்பையில்லா தூய்மையான நகரமாக உருவாக உள்ளது. மேலும் அம்ருத் திட்டத்தின் கீழ் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கின்ற நகரமாக எப்போது தண்ணீர் தேவையோ அப்போது வீட்டு குழாய்களில் உடனடியாக தண்ணீர் பிடிக்கின்ற திட்டத்தை செயல்படுத்துகின்ற அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை மாநகரில் 44 இடங்களில் தொட்டிகள் கட்டப்பட்டு அதன் மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மதுரை மாநகருக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே வராது.

    பெத்தானியாபுரம் பகுதிகளில் உள்ள சிந்தாமணி வாய்க்கால் கடந்த வாரம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தூய்மை பணியானது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 58 கிலோ மீட்டர் தூரம் உள்ள 13 வாய்க்கால்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    பெத்தானியாபுரம் பகுதியில் குடிநீரில் சாக்கடை கலப்பதை தவிர்க்கும் வகையில் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.

    மேலும் 100 வார்டுகளிலும் உள்ள பந்தல் குடி, மானகிரி, பீ.பீ.குளம், கோசாகுளம், பரசுராம்பட்டி, விளாங்குடி, சொக்கிகுளம், பனையூர், அனுப்பானடி, சிந்தாமணி, அவனியாபுரம், சொட்டதட்டி வாய்க்கால்கள் மற்றும் கிருதுமால் வாய்க்கால் ஆகிய மழைநீர் வாய்க்கால்கள் இது போன்று தூர்வாரப்பட உள்ளது.

    நாள்தோறும் சேரும் குப்பைகளை சேகரிப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் 509 மாசில்லா புதிய பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் இதனை சரியாக பயன்படுத்தி வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் முருகேசபாண்டியன், நகர்நல அலுவலர் (பொ) சரோஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஒவ்வொரு வீடாக பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகளையும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.
    Next Story
    ×