search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தொடரும் வழிப்பறி - பொதுமக்கள் அச்சம்
    X

    புதுவையில் தொடரும் வழிப்பறி - பொதுமக்கள் அச்சம்

    புதுவையில் தொடர்ந்து பெண்களிடம் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை தொடர்ந்து 3 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது. இதில் 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து 2 பெண்கள் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றனர்.

    ஒரு இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்த 3 சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வழிப்பறி சம்பவத்தின்போது அவர்களுக்குள் இந்தியில் பேசி கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் இவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்றது போல் வெள்ளிக்கிழமையான நேற்று வழிப்பறி சம்பவம் நடைபெற்று உள்ளது. உருளையன் பேட்டை முல்லைநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் விநாயகம், பைனான்சியர்.

    இவர் தனது மனைவி பிரேமாவுடன் நேற்று மாலை என்.டி. மகாலில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். திருமண வீட்டிற்கு செல்வதால் பிரேமா தன்னிடம் இருந்த 24 பவுன் நகைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சென்றார். இரவு 9 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். விநாயகம் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. விநாயகம் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும், பிரேமா இறங்கினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் இறங்கி பிரேமாவிடம் கத்தியை காட்டி மிரட்டினார். அப்போது பயத்தில் பிரேமா அலறினார். உடனே அந்த கும்பல் பிரேமாவின் கழுத்தில் இருந்த 12 பவுன் நகையை பறித்தனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்து அவரது மகன் ராஜ்மோகன் வெளியே வந்து தடுக்க முயற்சி செய்தார்.

    அவரை மர்ம ஆசாமிகளில் ஒருவன் கத்தியால் குத்தினான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கையில் சிக்கிய 12 பவுன் நகைகளுடன் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். மீதி 12 பவுன் நகை கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.

    புதுவையில் தொடர்ந்து பெண்களிடம் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


    Next Story
    ×