search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கலூரில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஆய்வு
    X

    பொங்கலூரில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஆய்வு

    பொங்கலூரில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சி பெருந்தொழுவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தினையும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.38.68 லட்சம் மதிப்பீட்டில் கொடுவாய் - நாச்சிப்பாளையம் சாலை முதல் ஆண்டிபாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும், கண்டியன்கோவில் ஊராட்சி தாயம்பாளையத்தில் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.

    தெற்கு அவிநாசிபாளையம் சாரதா நகரில் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முழு மானியத்துடன் 10 கழிப்பறைகள் கட்டும் பணியினையும், வடமலைபாளையம் ஊராட்சி, வேலப்பன் கவுண்டன்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.29.60 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினையும், புத்தரச்சல் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, கோவை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும், நாத கவுண்டன்பாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணியினையும் என பொங்கலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக, பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் கால்நடைகளுக்கான நீர்த்தேக்க தொட்டியினையும் அவர் பார்வையிட்டார்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், செயற்பொறியாளர் பிரேம்குமார், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், மகேந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×