search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கொலை- 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
    X

    நெல்லையில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கொலை- 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

    நெல்லையில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியை கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் அருகில் உள்ள கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ.நகரை சேர்ந்த முருகன் மகன் அசோக் (வயது 23). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார். மேலும், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள டயர் கம்பெனி ஒன்றில் அவர் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு 10.45 மணிக்கு கம்பெனியில் வேலை முடிந்து கரையிருப்புக்கு பஸ்சில் வந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது இருளில் மறைந்திருந்த கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார். உடனடியாக அவரது உடலை அந்த கும்பல் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்று விட்டது.

    இதை அறிந்த கரையிருப்பு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மதுரை-நெல்லை நெடுஞ்சாலையில் அமர்ந்து குற்றவாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை எடுக்க விடமாட் டோம் என கோ‌ஷங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன், துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமி‌ஷனர்கள் எஸ்கால், கோடிலிங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் நெல்லை தாசில்தார் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ‘திடுக்’ தகவல்கள் தெரியவந்தது. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த மாதம் அசோக், மோட்டார் சைக்கிளில் அவரது தாயார் ஆவுடையம்மாளை வைத்து வீட்டுக்கு சென்றார். அப்போது ஆவுடையம்மாள் மடியில் இருந்த புல்லு கட்டு, அந்த பகுதியில் உள்ள மற்றொரு பிரிவை சேர்ந்த வாலிபர் பேச்சிராஜ் (19) என்பவர் மீது இடித்தது. இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டது.

    இந்த பிரச்சினையில் பேச்சிராஜூம் அவரது நண்பர்களும் சேர்ந்து ஆவுடையம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆவுடையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பேச்சிராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இது பேச்சி ராஜின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அசோக்கை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

    அதன்படி நேற்று தனியாக நடந்து வந்த அசோக்கை அவர்கள் சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மீனாட்சி நாதன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி பேச்சிராஜ், அவரது நண்பர்கள் மூக்கன், முருகன், கணேசன், பாலு உள்பட 10 பேர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட அசோக்கின் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு அவரது உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் கரையிருப்பு, ஆர்.எஸ்.ஏ. நகர் பகுதியிலும் ஏராளமான போலீசார் இன்று குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசாரும் அங்கு ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட அசோக்கின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை மற்றும் தகுந்த நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும், அப்போது தான் அவரது உடலை வாங்கி செல்வோம் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×