search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி வளாகத்தில் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி - முகமூடி கொள்ளையனை பிடிக்க போலீஸ் தீவிரம்
    X

    பள்ளி வளாகத்தில் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி - முகமூடி கொள்ளையனை பிடிக்க போலீஸ் தீவிரம்

    பள்ளிப்பாளையம் அருகே பள்ளி வளாகத்தில் மாணவியிடம் நகை பறிக்க முயற்சி செய்த மூகமூடி கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    சம்பவத்தன்று பள்ளியில் உள்ள கழிவறைக்கு 10-ம் வகுப்பு மாணவி சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென பள்ளியின் சுற்றுச் சுவரை ஏறி குதித்து, மாணவியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியடித்துக் கொண்டு கழிவறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த நபர், ஒரு கொக்கி கம்பியை பின்பக்கமாக போட்டு மாணவியை இழுத்தார். இதில், மாணவி அணிந்திருந்த மேல்சட்டை கிழிந்தது.

    மாணவியின் சத்தத்தை கேட்டதும், மற்ற மாணவிகள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்ததும் மர்ம நபர் சுவரில் ஏறி வெளியே குதித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இந்த சம்பவம் பற்றி மாணவி, தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் கூறினார். இதையடுத்து அவர் பள்ளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், மர்ம நபர் கைது செய்யப்படவில்லை. இதனால் மாணவிகளின் பெற்றோர் ஆவேசமடைந்து, மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களிடம் தலைமை ஆசிரியை சரஸ்வதி, இன்ஸ்பெக்டர் சாந்த மூர்த்தி, நகராட்சி முன்னாள் தலைவர்கள் வெள்ளிங்கிரி, குமார், முன்னாள் துணை தலைவர்கள் சுப்பிரமணியம், ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, தினசரி காலை, மாலை நேரங்களில் போலீசார் பள்ளியை சுற்றி ரோந்து பணியில் ஈடுபடவும், கழிவறை காம்பவுண்டு சுவரை உயர்த்திக் கட்டவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதனால் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் நகை பறிக்க முயன்ற வாலிபரின் அங்க, அடையாளங்களை மாணவி போலீசாரிடம் தெரிவித்தார். அந்த வாலிபருக்கு சுமார் 20 வயது இருக்கும், வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார் என கூறினார்.

    மேலும் அடையாளம் காணாமல் இருப்பதற்காக அவர் முகத்தில் ஒரு துணியை கட்டி முகமூடி அணிந்திருந்தார். இதனால் அவரது முகம் எப்படி இருந்தது? என அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்தார். மாணவி கூறிய இந்த அங்க அடையாளங்களை வைத்து போலீசார், மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இதனிடையே பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று பள்ளி கேட் முன்பு போலீசார் நின்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×