search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் அறிவிப்பு
    X

    மின்சாரம் தாக்கி பலியான 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

    பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி பலியான 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி கால்வே அள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மற்றும் சரவணன் ஆகிய இருவரும் அறுந்து விழுந்திருந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

    திருப்பத்தூர் வட்டம், கீழப்பட்ட மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் பொது நீர்த்தொட்டியின் மின் மோட்டாரை இயக்க முற்பட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி சந்திரபிள்ளை கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி நீர் நிரப்ப மோட்டாரை இயக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    ராஜபாளையம் வடக்கு தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    வியாசர்பாடியைச் சேர்ந்த ஹரிஹரன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அருகிலுள்ள மின்மாற்றி கேபிளை பிடித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    விழுப்புரம் காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் விவசாய நிலத்திற்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டை பேலாளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை கல்லொட்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    குமாரபாளையம் ஓலப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

    உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×