search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள்- தமிழிசை கண்டனம்
    X

    தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள்- தமிழிசை கண்டனம்

    தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் புதிய கல்விக் கொள்கையை அதற்காக அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.

    அது ஓர் பரிந்துரைதான். அந்த பரிந்துரையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அது மத்திய அரசாலும் இன்னும் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. முடிவும் செய்யப்படவில்லை. ஆனால் அதற்கு முன்பே ஏதோ இந்தியை திணித்து விடுவதைப்போல ஸ்டாலின், வைகோ, முத்தரசன், சிதம்பரம் போன்றவர்கள் கடுமையான கண்டனத்தை, இல்லாத இந்தி திணிப்பை நோக்கி செலுத்தி இருக்கிறார்கள்.

    எங்கேயாவது போராட்டம் நடத்த வழி கிடைக்காதா? என தேடித்திரிபவர்கள் இல்லாத இந்தி திணிப்பை காரணமாகக் கொண்டு சுயலாப போராட்டங்கள் நடத்தலாம் என ஆயத்தமாகி வருகிறார்கள்.

    மத்தியில் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் இல்லாத இந்தி திணிப்பை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெளிவாகச் சொல்லி விட்டார். எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது என்று.

    அதே போல் இன்றைய மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியாலும் இந்தியை திணிக்கும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார். இதே கருத்தை பிரதமர் அலுவலகமும் தெரிவித்து இருக்கிறது

    மும்மொழிக்கொள்கை என்பது பரிந்துரைத்தல் மட்டுமே, கொள்கை முடிவல்ல என்பதையும், தெளிவாகச் சொன்ன பிறகும் ஏதோ இந்தி திணிக்கப் பட்டதை போல தொலைக் காட்சிகள் கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல. இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

    கஸ்தூரிரங்கன் எப்படி இப்படி ஒரு அறிக்கை தரலாம் என ஸ்டாலின் கேட்கிறார். அறிக்கை கொடுக்கலாம். அதை ஏற்றுக்கொண்டால்தானே கொள்கை முடிவு? நான் கேட்கிறேன் ஸ்டாலின் மீத்தேன் ஆராய்ச்சிக்கு கையெழுத்திட்டார்.


    ஏன் ஆராய்ச்சியை அனுமதித்து கையெழுத்திட்டார். முதலிலேயே முடியாது என்று ஏன் சொல்லவில்லை?

    ஆக இனித்தால் படிக்கலாம். திணித்தல் இல்லையென்றும் சொல்லியாகிவிட்டது. விருப்பம் இருந்தால் படிக்கலாம் வெறுப்பு இருந்தால் வேண்டாம் என்றும் சொல்லியாகி விட்டது. தேவையென்றால் படிக்கலாம் தேவை இல்லையென்றால் விட்டுவிடலாம். இது வரைவு அறிக்கைதான்.

    அதைவிட வேடிக்கை காங்கிரஸ் முதல்வர் பக்தவச்சலம் ஆட்சி காலத்தில்தான் இந்தி திணிப்பும், எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கி சூடும் நடந்தது. அதை எல்லாம் மறந்து விட்டு இன்றைய காங்கிரஸ் காரர்கள் தி.மு.க.வுடன் சேர்ந்து இந்தியை எதிர்ப்பதாக சொல்வதுதான்.

    இந்தி பயன்பாட்டை மத்திய அரசு அலுவல்களில் அதிகரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்ட ப.சிதம்பரம் இன்று இந்தி பயன்பாட்டை கண்டிப்பது இந்த ஆண்டின் மிகப் பெரிய வேடிக்கை?

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×