search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 25 பேரிடம் விசாரணை
    X

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - 25 பேரிடம் விசாரணை

    சென்னை விமான நிலையத்தில் கொழும்பு மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மும்பை பெண் உள்பட 25 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் கொழும்பை சேர்ந்த முகமது முனஸ்(வயது 40), ஜவ்சீர்(40), சென்னையை சேர்ந்த முகமது கலிபத்துல்லா(41), பெரோஸ்கான்(24), இமாம் பாபு(40), பைஷாத் ரகுமான்(35), விருதுநகரை சேர்ந்த சையத் சிக்கந்தர் (26), புதுக்கோட்டையை சேர்ந்த கலந்தர் சாகுல் அமீது (21), ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் இப்ராகிம் (39), விஸ்வநாதன்(48), முகமது ஆதம்(30), சிராஜுதீன் (38), பைசல் ஹக்(20), சையத் சுல்தான் (39), சுபையர் அலி(32), சபீர் முகமது (44), யூசுப் சாகிப் (28), நைனா முகமது (51), புருஷ்கான்(34), கலந்தர் ஹைதர்அலி (42) உள்பட 23 பேர் ஒரு குழுவாக வந்தனர்.

    அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சிவா(31), மும்பையை சேர்ந்த பெண் பர்சானா பேகம்(40) ஆகியோரும் வந்தனர்.

    கொழும்பு, துபாயில் இருந்து வந்த மும்பை பெண் உள்பட 25 பேர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அனைவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் அனைவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    அதில் எதுவும் இல்லாததால் அனைவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் மும்பை பெண் உள்பட 25 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 25 பேரிடம் இருந்தும் ரூ.2 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள், இந்த தங்கத்தை கொழும்பு, துபாயில் இருந்து யாருக்காக சென்னைக்கு கடத்தி வந்தனர்? என மும்பை பெண் உள்பட 25 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×