search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையின் 2-வது விமான நிலையத்தை 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் - ராமதாஸ்
    X

    சென்னையின் 2-வது விமான நிலையத்தை 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் - ராமதாஸ்

    சென்னையின் 2-வது விமான நிலையத்தை அடுத்த 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகரம் அனைத்து வழிகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. சென்னை மாநகருக்கு வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலைய நெரிசலைத் தவிர்ப்பதற்காக இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது அவசியமாகிறது.

    சென்னை விமான நிலையத்திற்கு, இப்போது தினமும் 470 விமானங்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த விமான நிலையம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர்.

    தேவைக்கு ஏற்றவாறு சென்னை விமான நிலையம் பல்வேறு காலகட்டங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டாலும் கூட, இப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கானத் திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது.

    சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் பசுமைவெளி விமான நிலையங்களை அமைக்க ஒரே நேரத்தில் திட்டமிடப்பட்டது. கொச்சி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன. விசாகப்பட்டினம் பசுமைவெளி விமான நிலையம் வரும் 2022-ம் ஆண்டில் தொடங்கப்பட இருக்கிறது.

    சென்னையில் பசுமைவெளி விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஸ்ரீபெரும்புதூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் இன்று வரை கைகூடவில்லை.

    ஒரு கட்டத்தில் கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 4 பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவற்றில் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் அருகே 3500 ஏக்கரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக தெரிகிறது.



    தமிழகத்தின் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய அவசிய, அவசரத் தேவை என்பதால் அதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கட்டுமான மற்றும் தொழில்நுட்பப் பணிகளையும் முடித்து சென்னையின் 2-வது விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×