search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
    X

    திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

    திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் யூனியனுக்குட்பட்ட பல பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அடிக்கடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆத்தூர் ஊராட்சி 7, 8 மற்றும் 17-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இன்று ஒரே நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    3 இடங்களில் ஒரே நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் ஆத்தூர், சித்தையன்கோட்டை, செம்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது.

    சம்பவ இடத்துக்கு செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினர். ஆனால் பி.டிஓ.வந்தால் தான் நாங்கள் மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் பிரவீனா வந்து பொதுமக்களிடம் பேசினார். மறியல் நடந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாசில்தாரோ மற்ற அதிகாரிகளோ யாரும் வராததால் மக்கள் மேலும் ஆவேசம் அடைந்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து தினசரி 7மணி நேரம் திண்டுக்கல்லுக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. ஆனால் ஆத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. தினமும் 1 மணி நேரம் குடிநீர் வழங்கினால் கூட ஓரளவு சமாளிக்க முடியும். தற்போது தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். குடிநீர் பிரச்சினையால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பயன் இல்லை. எனவே சரியான தீர்வு கிடைக்காமல் நாங்கள் மறியலை கைவிடமாட்டோம் என்றனர்.



    ஊராட்சி செயலாளர் மனவாளனிடம் கேட்ட போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு இது குறித்து எடுத்து கூறி உள்ளோம். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றார்.

    போராட்டம் நடத்தியவர்களை கலைந்து போக சொல்லி போலீசார் எச்சரித்தும் அவர்கள் நகரவில்லை. இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொதுமக்கள் முடிந்தால் எங்களை கைது செய்யுங்கள் என தெரிவித்தனர். இதனால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×