search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் புகார் - திமுக, விடுதலை சிறுத்தை நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு
    X

    சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறல் புகார் - திமுக, விடுதலை சிறுத்தை நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு

    சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதி மீறியதாக திமுக, விடுதலை சிறுத்தை நிர்வாகி உள்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ParlimentryElection2019
    சேலம்:

    தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததையடுத்து மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் இருந்த கட்சி கொடிகள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    இதே போல ஓமலூர் பஸ்டாண்ட் மற்றும் கார் நிறுத்தும் இடம் அருகே பல்வேறு கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டது. இதில் தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பமும் அகற்றப்பட்ட நிலையில் அந்த பீடத்தில் இருந்த சின்னம், பெயர்கள் மறைக்கப்படாமல் இருந்தது.

    இதுகுறித்து கோட்ட மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமார் (37) தேர்தல் விதி மீறியதாக ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஓமலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குப்புசாமி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் ஆகியோர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதே போல சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் மணிவேல் (44) என்பவர் தனது கடை முன்பு மரக்கம்பில் தி.மு.க. கொடியை பறக்கவிட்டிருந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணிவேல் மீது சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதையொட்டி சென்டர் மீடியன் அமைந்துள்ள பகுதியில் தி.மு.க., காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

    தேர்தல் அதிகாரிகள் உத்தரவுப்படி ஆத்தூர் டவுன் போலீசார் தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்ரமணியன் மீது பொது சொத்துக்கு சேதப்படுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

    ஆத்தூர் அருகே உள்ள அப்பமசமுத்திரத்தில் தேவராஜ் என்பவரது சுவரில் அனுமதியில்லாமல் கொங்கு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் மீது ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேவூர் அண்ணமார் கோவில் காவேரிப்பட்டி பிரிவு ரோட்டில் வாய்க்கால் திட்ட மதிப்பீடு பலகை உள்ளது. இதில் வரும் தேர்தலில் ஓட்டு போட வேண்டாம், நோட்டாவுக்கு போடவும் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் தேவூர் போலீசார் கோணக்கழுத்தானூரை சேர்ந்த பழனிவேல் (46) என்பவரை கைது செய்தனர்.

    தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள நீர்தேக்க தொட்டியில் உங்கள் ஓட்டை நோட்டாவுக்கு போடவும் என எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (41) என்பவரை கைது செய்த தேவூர் போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். #ParlimentryElection2019
    Next Story
    ×