search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலத்தில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் பணம் திருடிய பெண் கைது
    X

    தாரமங்கலத்தில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் பணம் திருடிய பெண் கைது

    தாரமங்கலத்தில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் பெண் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள எலவடை பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம்.

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 25).

    இவர் நேற்று உறவினர் திருமணத்திற்காக சேலம் சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்குவதற்காக பஸ் நின்ற போது சித்ரா அருகில் உட்கார்ந்திருந்த பெண் அவசர, அவசரமாக படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார்.

    அப்போது சந்தேகம் அடைந்த சித்ரா தனது கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. இந்த பணத்தை அவர் திருடிக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கியது தெரியவந்தது.

    இதனால் சித்ரா சத்தம் போடவோ பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், பணத்தை திருடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை பிடித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் சுமதி(50) என்பதும், ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருடைய மனைவி என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சுமதியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×