search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண கோலத்தில் காதல் ஜோடி
    X
    திருமண கோலத்தில் காதல் ஜோடி

    பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம் - போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை வி‌ஷம் குடித்தார்

    ஆத்தூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து காதல் ஜோடி போலீஸ் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கார்த்திக்குமார் (வயது 26). பி.சி.ஏ. படித்துவிட்டு மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் கல்லூரியில் சேர்த்துவிடும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

    இவருக்கும் ராசிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வரும் சூர்யா (22) என்ற மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் சூர்யாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திக்குமார் - சூர்யா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்கள் நேற்று பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது சூர்யாவின் தந்தை ரங்கசாமி, தாய் சுமதி, சகோதரர் வீரப்பன் ஆகியோர் எங்களது பெண்ணை எங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் நாங்கள் 3 பேரும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள்.

    ஆனாலும் சூர்யா இதற்கு மசியவில்லை. காதல் கணவருடன் தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்.

    இதனால் மன வேதனை அடைந்த சூர்யாவின் தந்தை ரங்கசாமி போலீஸ் நிலையத்திற்கு வெளியே வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்த அவரது மனைவி சுமதியும் வி‌ஷம் குடிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அந்த வி‌ஷ பாட்டிலை தட்டி விட்டனர்.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் மீட்டு ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இச்சம்பவம் பற்றி அறிந்த கார்த்திக்குமர் மற்றும் சூர்யாவின் உறவினர்கள் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சூர்யா பெற்றோருடன் செல்ல மறுத்ததால் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு இனி உனக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டு உறவினர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து போலீசார் சூர்யாவை காதல் கணவர் கார்த்திக்குமாருடன் அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவத்தால் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பும் பதட்டமான சூழ்நிலையும் நிலவியது. #tamilnews
    Next Story
    ×