search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் - 4 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு
    X

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் - 4 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு

    கச்சத்தீவு அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் சுமார் 4 ஆயிரம் பேரை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் வலைகளை நாசப்படுத்தியதுடன் ஒரு மீனவரையும் தாக்கியுள்ளனர். #TNfishermen #TNfishermenchased #LankaNavy
    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில்,  590-க்கும்  மேற்பட்ட படகுகளில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர்.

    அவர்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, இங்கு மீன் பிடிக்கக்கூடாது என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டனர்.

    அப்போது சில கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து வலைகளை அறுத்து எறிந்தனர். தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ரீகன் என்பவரது படகிற்குள் நுழைந்த கடற்படையினர், ரீகன் உள்பட 4 மீனவர்களை தாக்கினர்.

    மேலும் பல மீனவர்கள் படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள் பாதியிலேயே மீன்பிடிப்பதை விட்டுவிட்டு இரவிலேயே கரை திரும்பிவிட்டனர்.

    தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவது மீன்பிடி தொழிலை நசுக்கும் செயல். இதனை மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி இதேபோல் சுமார் 3 ஆயிரம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது நினைவிருக்கலாம். #TNfishermen #TNfishermenchased  #LankaNavy  
    Next Story
    ×