search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசர் (வயது 35), விவசாயி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    திருநாவுக்கரசர் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் அவரை லட்சுமி கண்டித்தார்.

    இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டது. நேற்று மாலையும் திருநாவுக்கரசர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டு ஒழுங்காக வேலைக்கு செல்ல வேண்டியதுதானே என்று லட்சுமி சத்தம்போட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    பின்னர் லட்சுமி கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை கலியன் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திருநாவலூர் போலீசில் கலியன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×