search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பாலைக்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.23 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு
    X

    திருப்பாலைக்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.23 லட்சத்தில் ஆழ்குழாய் கிணறு

    திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களின் குறைகளை கேட்ட கலெக்டர் அதிகாரிகளை அழைத்து மனுவில் குறிப்பிட்ட தேதிக்குள் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 267 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.51 ஆயிரத்துக்கான காசோலைகளையும், சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகையாக 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,85,157-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    ராமேசுவரம் வட்டம், தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியா என்பவரின் மகன் பூண்டிராஜ் என்ற மீனவர் படகு மோதிய விபத்தில் தனது இடது கை இழந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினையும், வருவாய்த்துறையின் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக 9 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1,08,000க்கான காசோலைகள் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.3,94,157 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று திருப்பாலைக்குடிக்கு சென்ற கலெக்டரிடம் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை பரிசீலித்த கலெக்டர் திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை வழங்கினார். இந்த பணிக்கு கிராம பொது மக்களும் தாமாகவே முன் வந்து ரூ.7 லட்சத்தினை மக்கள் பங்களிப்பாக செலுத்தினர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமாஅமாலினி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×