search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி போனஸ் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் - பாண்லே முகவர்கள் சங்கம் முடிவு
    X

    தீபாவளி போனஸ் வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் - பாண்லே முகவர்கள் சங்கம் முடிவு

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க வேண்டும் என பாண்லே முகவர்கள் சங்கம் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    பாகூர்:

    புதுவை பாண்லே பால் விற்பனை முகவர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஏ.ஐ.டி.யூ.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    சங்க தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் அபிஷேகம், பஞ்சாலை சங்க நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ரவி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை தலைவர் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கத்தின் எதிர்கால நடவடிக்கை பற்றி செயலாளர் முருகன் விளக்கினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * பாண்லே நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கும், பாலை பதனிடும் தொழிலாளர்களுக்கும் பாண்லே அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுதோறும் போனஸ் வழங்கி வருகிறது.

    ஆனால், பாலை மக்களிடம் கொண்டு சென்று விற்று பணமாக்கி கொடுக்கும் விற்பனை ஏஜெண்டுகளுக்கு (முகவர்) மட்டும் போனஸ் வழங்க மறுத்து வருகிறது.

    இந்த பாரபட்ச நிலையை பாண்லே நிர்வாகம் கைவிட்டு விற்பனை ஏஜெண்டுகளுக்கும் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க வேண்டும்.

    * முகவர்கள் அலுவலக நேரத்துக்குள் பணம் கட்டத்தவறினால் அதற்காக அபராதமாக அன்றைய ஏஜெண்டின் கமி‌ஷனில் 10 சதவீதம் தொகையை பிடித்தம் செய்து வந்த வகையில் ஒவ்வொரு ஏஜெண்டுக்கும் தலா சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை நிர்வாகம் பிடித்தம் செய்து வைத்துள்ளது. அபராதம் என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வாகத்திடம் உள்ள ஏஜெண்டுகளுக்கு சேர வேண்டிய அந்த தொகையை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும்.

    * முன்பணம் செலுத்தி பாண்லேவில் இருந்து பாலை பெற்று விற்பனை செய்யும் ஏஜெண்டுகளை நிரந்தர முகவர்களாக மாற்றம் செய்ய வேண்டும். வைப்பு தொகை செலுத்தி பாண்லேவில் பாலை பெற்று பல ஆண்டுகளாக வியாபாரம் செய்த சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்கு உதவியாக இருந்த வர்களிடம் பூத்தை மாற்றி கொடுத்துள்ளனர்.

    அதுபோல் பூத்தை மாற்றி வாங்கியவர்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக நடத்தி வரும் நபர்களுக்கே விற்பனை உரிமத்தை மாற்றி வழங்க வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி காலை 8 மணி முதல் அலுவலக நேரம் முடிய குருமாம்பேட் பாண்லே தலைமை அலுவலகம் முன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்வது என கூட்டம் முடிவு செய்கிறது.
    Next Story
    ×