search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 வழிசாலை அமைக்கும் பணிக்கு நிலங்களை கொடுக்க மாட்டோம் - பொதுமக்கள் மனு
    X

    4 வழிசாலை அமைக்கும் பணிக்கு நிலங்களை கொடுக்க மாட்டோம் - பொதுமக்கள் மனு

    அதியமான்கோட்டை-ஓசூர் இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிக்கு நிலங்களை கொடுக்க மாட்டோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மனு அளித்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர்வரை 4 வழி சாலை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் குறித்த உத்தேச விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக 220 அடிக்கும் கூடுதலாக விவசாய நிலங்களில் அறிவிப்பு வருவதற்கு முன்பே முட்டுக்கற்களை நட்டுவிட்டனர். 8 வழி சாலையை விட கூடுதலாக நிலம் கையகப்படுத்த கற்களை நட்டுள்ளனர். ஓசூர்-தர்மபுரி இடையே உள்ள பகுதியில் ஜக்கசமுத்திரம் ஏரி, ஜெர்தலாவ் ஏரி, பி.கொல்லஅள்ளி ஏரி, செம்மணஅள்ளி ஏரி, பி.செட்டிஅள்ளி ஏரி, ஜெர்தலாவ் ஏரி, பாப்பிநாயக்கனஅள்ளி ஏரி உள்பட 9 ஏரிகள் வழியாக இந்த 4 வழி சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

    இதுதவிர வனப்பகுதிகளும் லட்சக்கணக்கான மரங்களும் வெட்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலை அமைக்கும் பணிக்கு பாலக்கோடு, கர்த்தாரப்பட்டி, குண்டுக்கல், சோமனஅள்ளி, புலிகரை, இருதயபுரம், செல்லியம்பட்டி, கொல்லப்பட்டி, கடகத்தூர், பூசாரிப்பட்டி, சோகத்தூர், வெண்ணாம்பட்டி மேட்டுத்தெரு உள்ளிட்ட 13 பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் 4 வழி சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கொடுக்கமாட்டோம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×