search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார கார், பைக்குகளுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையம்
    X

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார கார், பைக்குகளுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையம்

    சென்னையில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார கார், பைக்குகளுக்கு ‘சார்ஜ்’ ஏற்றும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. #MetroTrain #ChennaiMetro
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கபாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. பயணிகள், பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிகள், பொதுமக்கள் தினமும் 55 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்பட அனைவரும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பெரும்பாலான பயணிகள் மின்சார கார், பைக்குகளில் வருகிறார்கள். அங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காகவும், சுற்றுச்சூழல் பசுமையை பாதுகாக்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் நிறுவனம் மின்சார கார், பைக்குகளுக்கு ‘சார்ஜ்’ ஏற்றும் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.


    திருமங்கலம், செயின்ட் தாமஸ்மவுண்ட், கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சார ‘சார்ஜ்’ நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 10 பைக்குகள், 5 கார்களுக்கு மின்சார ‘சார்ஜ்’ செய்யும் வசதி உண்டு.

    முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மகேந்திரா மற்றும் ஓலா, உபர், டூரிஸ்ட், வாடகை கார் நிறுவனங்கள் மின்சார கார்களை இயக்கி வருகின்றனர். இந்த கார் நிறுவனங்கள் மின்சார சார்ஜ் நிலையங்களை பெரிதும் வரவேற்றுள்ளன.

    திருமங்கலம், ஏர்போர்ட் மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாடகை டூவிலர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டி பெப் பிளஸ் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள் மணிக்கு ரூ.75 வீதம் வாடகைக்கு விடப்படுகிறது. டூவீலர்களை வாடகைக்கு எடுத்து செல்ல ரூ.2 ஆயிரம் முன் பணமாக வைப்பு தொகை செலுத்த வேண்டும். #MetroTrain #ChennaiMetro
    Next Story
    ×