search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயருகிறது- வாகன ஓட்டிகள் கவலை
    X

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயருகிறது- வாகன ஓட்டிகள் கவலை

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக அவ்வப்போது பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது.

    இருந்தபோதிலும் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது.

    இதை உறுதி செய்யும்வகையில் கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில் 13-ந்தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    அதாவது, 13-ந்தேதி நள்ளிரவுக்கு முன்னதாக பல நாட்களாக சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52-ம் ஆக இருந்தது. ஆனால், 13-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.22 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.61 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.27 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.69.79 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    14-ந்தேதி நள்ளிரவு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.16 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.77.77 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோன்று டீசல் விலை ஒரு லிட்டருக்கு 0.23 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.70.02 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    கடந்த ஏப்ரல் மாதத்தை பொறுத்தமட்டில் 24-ந்தேதிக்கு பின்னர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை குறைந்தபட்சம் ரூ.76.48 ஆக இருந்தது. அதிகபட்சம் ரூ.77.43 ஆக இருந்தது.

    இதன்படி பார்த்தால் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பெட்ரோல் விலை 0.85 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோன்று ஏப்ரல் மாதத்தில் ஒரு லிட்டர் டீசல் விலை குறைந்தபட்சம் ரூ.68.12 ஆக இருந்தது. அதிகபட்சம் ரூ.77.43 ஆக இருந்தது. இதன்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக டீசல் விலை 1.44 காசுகள் மட்டுமே உயர்ந்துள்ளது.

    ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 0.38 காசுகளும், டீசல் விலை 0.50 காசுகளும் உயர்ந்துள்ளது. பொதுவாக ஓரிரு நாட்களில் சராசரியாக 0.02 காசுகள் முதல் 0.10 காசுகள் வரை விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும் என்றும், கடந்த 2 நாட்களாக வழக்கத்தை விட கூடுதலாக விலை ஏற்றம் செய்யப்படுவதாகவும், இதுபோன்ற விலை ஏற்றம் இன்னும் ஒருவாரத்துக்கு இருக்கலாம் என்றும் பெட்ரோல்-டீசல் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews 
    Next Story
    ×