search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.வி.சேகரை கைது செய்யாவிட்டால் போராட்டம் - கி.வீரமணி எச்சரிக்கை
    X

    எஸ்.வி.சேகரை கைது செய்யாவிட்டால் போராட்டம் - கி.வீரமணி எச்சரிக்கை

    போலீசுக்கு சவால் விடும் எஸ்.வி.சேகரை கைது செய்யாவிட்டால் அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜனதா பிரமுகர் எஸ்.வி.சேகர் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி, சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

    அவர்மீது, அமைதியை சீர்குலைப்பது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், தலைமறைவான எஸ்.வி.சேகர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டும், நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டதோடு, கடுமையாக நீதிபதி சாடியும் உள்ளார்.

    இந்தச் சூழ்நிலையில், அந்தப் பேர்வழி, சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார்.

    செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர் ஒரு விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டதையும், தனக்கு வணக்கம் தெரிவித்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    இதைவிடக் கொடுமை என்னவென்றால், நான் சென்னையில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

    சென்னைப் பெருநகரக் காவல்துறை அவரைக் கைது செய்யாதது ஏன்? ஒரே நேரத்தில் 62 ரவுடிகளைப் பிடித்துச் சாதனை படைத்த திறமைக்குச் சொந்தமானது சென்னைப் பெருநகரக் காவல்துறையும் சிறப்பான ஆணையரும்.

    எஸ்.வி.சேகர் வி‌ஷயத்தில் கைகட்டிக் கொண்டு இருப்பது ஏன்? யாருடைய கட்டளையால் இந்த நிலை? தமிழக அரசின் தலைமைச் செயலாளரே பின்னணியில் இருக்கிறார் என்ற கருத்துப் பரவலாக இருக்கிறதே!

    சவால் விடும் அந்தப் பேர்வழியை இன்றே கைது செய்யாவிட்டால், அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×