search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாசர்பாடி - மாட்டுமந்தை பாலத்தை திறக்க போட்டி: தி.மு.க - பா.ம.க. அறிவிப்பால் பரபரப்பு
    X

    வியாசர்பாடி - மாட்டுமந்தை பாலத்தை திறக்க போட்டி: தி.மு.க - பா.ம.க. அறிவிப்பால் பரபரப்பு

    வியாசர்பாடி - மாட்டுமந்தை பாலத்தை திறக்க தி.மு.க, பா.ம.க. அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இது அரசுக்கு அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காகவே முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.

    இவ்வாறு கட்டப்படும் பால பணிகள் நடக்கும் போது தற்காலிக சிரமங்களை பொதுமக்கள் தாங்கி கொள்கிறார்கள். ஆனால் பால பணிகள் முடிந்த பிறகும் அதை திறந்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்வதை அரசு கண்டு கொள்வதில்லை.

    அரசு சம்மதம் தெரிவிக்கும் வரை திறப்பு விழாவுக்காக அதிகாரிகளும் காத்திருக்கிறார்கள்.

    இதனால் கோபத்துக்குள்ளாகும் பொதுமக்களே பாலத்தை திறந்து விடும் சம்பவமும் நடக்கிறது. அப்படித்தான் போரூர் மேம்பாலத்தை பொதுமக்கள் திறந்தார்கள். அதன் பிறகு சம்பிரதாயப்படி முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஒரு நாள் திறப்பு விழா நடத்தப்பட்டது.

    இதே போல் வடபழனியில் அமைக்கப்பட்ட மேம்பாலமும் திறப்பு விழாவுக்கு தாமதமானதால் பா.ம.க. திறக்க போவதாக அறிவித்ததும் அவசர அவசரமாக திறக்கப்பட்டது.

    அதே போல் இப்போது கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களை திறக்க தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன.

    வியாசர்பாடியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சத்தியமூர்த்தி சாலை-பேசின் பிரிட்ஜ் இடையே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு தி.மு.க ஆட்சியின் போது பூமி பூஜை நடந்தது.

    அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

    அதை தொடர்ந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு பால பணிகள் தொடங்கியது.

    ‘ஒய்’ வடிவிலான இந்த பாலத்தில் சத்திய மூர்த்தி சாலையில் இருந்து பேசின் பிரிட்ஜ்க்கு ஏறி செல்லும் படியும், பேசின் பிரிட்ஜில் இருந்து மார்கெட் சாலைக்கு இறங்கி செல்லும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆமை வேகத்தில் நடந்து ஒரு வழியாக பேசின் பிரிட்ஜ்- சத்தியமூர்த்தி சாலை மேம்பால பணி முடிந்து கடந்த 2015-ல் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

    அதன்பிறகு 2 வருடமாக தொடர்ந்து பேசின் பிரிட்ஜ் - மார்க்கெட் சாலை பால பணி முடிந்து விட்டது. ஆனால் அரசு அனுமதி கிடைக்காததால் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.

    திருவொற்றியூரில் இருந்து மணலி செல்ல மாட்டுமந்தை ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டும்.

    இந்த வழித்தடத்தில் ஏராளமான சரக்கு ரெயில்களும், வட மாநில எக்ஸ்பிரஸ் ரெயில்களும் செல்வதால் தினமும் குறைந்தது 100 முறையாவது ரெயில்வே கேட் மூடப்படும். இதனால் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி 2014-ல் தொடங்கியது. 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த பணி பல்வேறு பிரச்சினைகளால் அவ்வப்போது தடைபட்டது.

    கடைசியில் ஒரு வழியாக இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 564 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் பணி முடிந்ததும் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை.

    இதற்கிடையில் இரு சக்கர வாகனங்களை மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இது வெளியே தெரிந்ததும் மீண்டும் பாலத்தை அடைத்து வைத்துள்ளனர். திறப்பு விழாவுக்கு அரசு இன்னும் தேதி கொடுக்காததால் தாமதமாவதாக கூறப்படுகிறது.

    இதனால் 564 மீட்டர் தூரத்தில் கடந்து செல்ல வேண்டியதற்கு பதிலாக 7 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

    கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாலங்களை தி.மு.க.வினர் திறந்து வைக்க முடிவு செய்துள்ளார்கள்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பணிகள் என்பதால் திறப்பு விழாவையும் நடத்திவிட ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையில் பா.ம.க.வும் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை பா.ம.க திறக்கும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    நாளை மறுநாள் ஏ.கே.மூர்த்தி தலைமையில் மாட்டு மந்தை பாலம் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

    இது அரசுக்கு அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×