search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் இன்று ஆசிரியை வீட்டில் 50 பவுன் கொள்ளை
    X

    திண்டுக்கல்லில் இன்று ஆசிரியை வீட்டில் 50 பவுன் கொள்ளை

    திண்டுக்கல்லில் ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம். காலனி 12-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மினி (55).

    திண்டுக்கல்-பழனி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரபு (25), டேனியல் (22) ஆகிய மகன்கள் உள்ளனர். பிரபு என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். டேனியல் சென்னையில் படித்து வருகிறார்.

    கணவர் இறந்து விட்டதால் பிரபுவுடன் ருக்மினி வசித்து வந்தார். இவரது வீட்டு மாடியில் நிர்மலா (50), சுனில் (28) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ருக்மினி சென்னையில் படிக்கும் தனது மகனை பார்க்க பிரபுவுடன் சென்று விட்டார். அதேபோல் மாடியில் வசித்த நிர்மலா மற்றும் சுனிலும் வெளியூருக்கு சென்று விட்டனர்.

    இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் நேற்று ருக்மினியின் வீட்டிற்குள் புகுந்தனர். முன்புற கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

    அதனையடுத்து மாடிக்கு சென்ற அவர்கள் நிர்மலா மற்றும் சுனில் வீட்டிற்குள்ளும் புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்தனர். மொத்தம் 3 வீடுகளிலும் 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை பார்த்ததும் சென்னையில் உள்ள ருக்மினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது மகனுடன் திண்டுக்கல் விரைந்தார்.

    இதேபோல சேலத்திற்கு சென்ற நிர்மலாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் வேகமாக ஊர் திரும்பினார். இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. போலீஸ் நிலையம் அருகிலேயே 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×