search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் - புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
    X

    ராமேசுவரம் - புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

    இலங்கை கடற்படையினர் ஒரே நாளில் 2 முறை தமிழக மீனவர்களை தாக்கியதோடு 10 பேரையும் 2 படகுகளையும் சிறை பிடித்து சென்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 51 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் தாக்கு தலையும் சிறைபிடிப்பையும் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் சோகம் தொடர் கதையாகவே உள்ளது.

    ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர்.

    அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் புகுந்து திடீரென தாக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட முயன்றனர். அப்போது ராமேசுவரத்தை சேர்ந்த ஜான் கெட்பர் என்பவரது படகையும். அதில் இருந்த நம்பு, கார்த்திகைசாமி, சுப்பிரமணியன், குமரவேல் ஆகிய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். 

    இதே போல் புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள், ஒரு படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் காரை நகர் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராமேசுவரம் மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சிறைபிடிப்புக்கு முன்பு கச்சத்தீவு அருகேயும் மீனவர்கள் மீது முதலில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. ரோந்து கப்பலை பிரவீன் என்பவரது விசைப்படகில் மோத விட்டு அவர்கள் தாக்கியதில் விசைப்படகின் பலகை உடைந்துள்ளது.

    அதில் இருந்த மீனவர்கள் பிரகாசம், மெசாக், இனியன், சுரேஷ், கிறிஸ்டோபர், மெல்ராஜ் ஆகியோர் நிலைதடுமாறி கடலுக்குள் விழ முயன்றனர். இருப்பினும் படகின் பக்கவாட்டை பிடித்து அவர்கள் உயிர் தப்பினர்.

    அப்போது படகின் டிரைவரான டிடிட்ராஜ், படகை இயக்கும் காற்றாடி போன்ற இறக்கை மீது விழுந்து காயம் அடைந்ததோடு, கடலிலும் விழுந்து விட்டார். அவரை மீட்ட கடற்படையினர் பட கோடு 7 பேரையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். 

    அந்த நேரத்தில் கடல்நீர் படகில் புகுந்ததால் பயந்துபோய் மீனவர்களோடு படகை விட்டுச்சென்று விட்டனர். அதன்பிறகு என்ஜினை இயக்கி மீனவர்கள் வேகமாக கரை திரும்பினர்.

    தாக்குதலில் காயம் அடைந்த டிடிட்ராஜ், சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஒரே நாளில் 2 முறை மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ராமேசுவரம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மீனவ சங்கத் தலைவர் சேசுராஜா, தேவதாஸ் ஆகியோர் கூறுகையில் 2-ந் தேதி நடந்த பேச்சு வார்த்தையின் போது, தமிழக மீனவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. இனியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    Next Story
    ×