search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் கடும் வறட்சி - தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகின
    X

    தமிழகம் முழுவதும் கடும் வறட்சி - தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகின

    தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழைகள் இந்த ஆண்டு பொய்த்து விட்டதால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். கர்நாடகத்தில் இருந்து போதிய காவிரி நீர் கிடைக்காததால் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்து விட்டது.

    கடந்த 4 ஆண்டுகளில் சம்பா சாகுபடி நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு போதுமான ஆற்று நீரும், மழை நீரும் கிடைக்காததால் டெல்டாவில் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    பம்பு செட் பாசனம் மூலம் சாகுபடி செய்தவர்களின் விளைநிலங்களில் நிமிர்ந்து நின்ற பயிர்களும் போதுமான தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சம்பா பயிர்கள் கருக தொடங்கியது.

    டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் 3.30 லட்சம் ஏக்கர் சம்பா சாகுடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 2.40 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. 63 ஆயிரத்து 500 ஏக்கர் நேரடி நெல் விதைப்பாகும்.

    திருவாருரில் 3 லட்சத்து 400 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 2¼ லட்சம் ஏக்கர் நேரடி விதைப்பாகும்.

    நாகை மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கர்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் விவசாயிகள் மாரடைப்பால் மரணம், தற்கொலை போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தண்ணீரை தேக்கி வைக்க அணைகள் கிடையாது.

    தற்போது ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு போய் உள்ளது.

    மேட்டூர் அணையை மட்டுமே நம்பி விவசாயம் செய்ய முடியும். குடிநீருக்கும் மேட்டூர் அணை தண்ணீர் தான் கை கொடுத்து வந்தது. தற்போத மேட்டூர் அணையின் நீர் இருப்பு மிக குறைவாக உள்ளது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் மழையை நம்பித்தான் உள்ளது. இதில் திருப்புவனம், மானாமதுரை தாலுகா மட்டும் வைகை பாசனத்தை நம்பி உள்ளது.

    தற்போது பருவ மழை போதிய அளவை விட மிகவும் குறைவாக பெய்ததால் ஒருபோக விவசாயம் கூட பயனற்றதாகி விட்டது. வறட்சி காரணமாக திருப்புவனம் தாலுகா இந்த ஆண்டு கடும் வறட்சியில் சிக்கி உள்ளது. திருப்புவனம் தாலுகாவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் விளையாமல் “சாவி”யாகி விட்டன.

    மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை வைகை நீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக வைகை வறண்டு பாலைவனமாக காட்சி அளிக்கிறது.



    பல இடங்களில் பருவ மழையை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு உள்பட பல பண பயிர்களை பயிரிட்டு இருந்தனர். வளர்ந்து வந்த நிலையில் பருவ மழை பொய்த்ததால் கருக தொடங்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதம் அடைந்தது. மதுரை மாவட்டத்தில் 85 சதவீதம் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 அணைகளும், 990 கண்மாய்களும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை பொய்த்ததன் காரணமாக மாவட்டத்தில் 3¼ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மானாவாரி பயிர்கள் கருகி விட்டன. மக்காச்சோளம், நெல், குதிரைவாலி, கரும்பு, வாழை, பருத்தி போன்றவை மண்ணில் சாய்ந்துவிட்டன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 886 ஹெக்டேர் நிலபரப்பில் நெல் பயிர் பயிடப்பட்டு இருந்தது போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது.

    விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீரின்றி 100 ஏக்கர் அளவில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அனைத்தும் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கால்நடைகளை மேயவிட்டுள்ளனர்.



    நெற்பயிருக்கு அடுத்தபடியாக கரும்பு பயிர்களும் போதிய நீர்பாசனமின்றி காய்ந்து வருகிறது. வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாசனம் செய்ய வேண்டிய கரும்புக்கு சரிவர தண்ணீர் பாய்ச்ச முடியாததால் கரும்பு பயிர்கள் வீணாகி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே பெய்யக்கூடிய தென்மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மழை பொய்த்துப்போனதால் ஆறுகள், குளங்களில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. மழையை நம்பி வயல்களில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் கருகி வருகின்றன.

    அகன்று ஓடிய தாமிரபரணி ஆற்றின் மையப்பகுதியில் தண்ணீர் ஓடிவருவதால், கால்வாய் போன்று காட்சி அளிக்கிறது. கடும் வறட்சி நிலவுவதால் மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் கருகியுள்ளன.

    தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதிகளில் தாமிரபரணி ஆற்று பாசனத்தினை நீராதாரமாக கொண்டு நெல், வாழை, வெற்றிலை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தினால் தாமிரபரணிக்கு தண்ணீர் தரும் அணைகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. பாசனத்திற்கான தண்ணீர் இல்லாத சூழலில் ஐப்பசி மாதத்தில் துவங்கி கார்த்திகை மாதத்திற்குள் நிறைவுபெறவேண்டிய பிசான நெற்பயிர் சாகுபடிக்கான பணிகள் இன்னும் துவங்கப்படவே இல்லை. தற்போது பெய்த மழையில் வயல்வெளிகளில் எல்லாம் காட்டுச்செடிகளும், புற்களும் முளைத்து கிடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பருவ மழை முறையாக பெய்தபோது 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நெற்பயிர் சாகுபடி நடந்தது. அது இப்போது படிப்படியாக குறைந்து சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவாகியது. இந்த ஆண்டு பருவ மழை முற்றிலும் ஏமாற்றியதால் வழக்கமான சாகுபடி பரப்பளவும் குறைந்து 5700 ஹெக்டேர் நிலப்பரப்பிலேயே சாகுபடி நடந்தது.

    மாவட்டம் முழுவதும் சுமார் 4700 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வேலூர் மேற்கு மாவட்ட பகுதிகளில் பருத்தி, நிலக்கடலை பல ஆயிரம் ஏக்கரில் நடவு செய்திருந்தனர். மழை இல்லாததால் இந்த பயிர்கள் கருகிவிட்டன.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ஏரிகளில் 300 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டே கிடக்கிறது. மீதமுள்ள 300 ஏரிகளில் குறைந்தளவில் தண்ணீர் உள்ளது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள 71 ஆயிரத்து 873 ஏக்கர் விலை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, நெல் மற்றும் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் மஞ்சள் பயிர் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் 15 ஆயிரம் ஏக்கால் பயிரிடப்பட்டு உள்ள மஞ்சள் தண்ணீர் இல்லாமல் கருகி விட்டன.

    Next Story
    ×